எமது மக்களைத் தொடர்ந்தும் இராணுவக்கெடுபிடிக்குள் வைத்திருக்கவே இலங்கையின் ஒவ்வொரு அரசும் விரும்புகிறது இந்த அரசும் அதை கனகச்சிதமாக செய்கிறது எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குரும்பசிட்டி கிராம மக்களுடனான அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்களின் வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது.எமது அடிப்படை அரசியல் உரிமைக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். மறுபுறத்தில் நிலமீட்பிற்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். காணாமல்ப்போனோருடைய உறவுகள் உறவுகளின் மீட்பிற்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இளைஞர் யுவதிகள் வேலைவாய்பிற்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் தங்களின் வாழ்க்கைக்காகவே போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில் தான் இந்த பிரதேசம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் அருகில் உள்ள கிராமங்களை இராணுவம் விடுவிக்காமல் தொடர்ந்தும் இராணுவமே வைத்திருக்கிறது.
விவசாயம் செய்து எங்கள் வாழ்வியலை மேம்படுத்த கூடிய நிலங்களை எல்லாம் இராணுவம் கையகப்படுத்தி இருக்கிறது.நாங்கள் சுயமாகவும் மேலெழும்பி விடாமலும் தடுப்பதுதான் இவர்களின் நோக்கமா? எனவும் சிறீதரன் மேலும் தெரிவித்தார்
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் தங்கராசா பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் லோகன் ஆலயநிர்வாகத்தினர் கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

