வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
நகரசபை கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதி, முச்சந்தியிலுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுத் தூபியில் நகர உபபிதா சு.குமாரசுவாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுப் பேருரையை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தியிருந்தார். ‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை’ என்ற பாடலை வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவர்கள் பாடியிருந்தனர்.
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர், தமிழ்மணி அகளங்கன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முச்சக்கர வண்டிகள் உரிமையாளர் சங்கத்தலைவர் ரவி, சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஆடிப்பிறப்பை முன்னிட்டு வருடாவருடம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த கூழ், கொழுக்கட்டை இம்முறை கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

