காணி திருத்த சட்ட மூலம் வெற்றிபெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களுக்கு நன்மை புரிவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து தேசிய வளங்களைப் பிற நாடுகளுக்கு விற்கும் சூழ்ச்சியினையே முன்னெடுக்கின்றது என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வஜிராஷ்ரம விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காணி திருத்தச்சட்ட மூலம் நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிராக பல மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆகவே இந்த மசோதாவை ஒருபோதும் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. ஒருபோதும் இந்த சட்டம் வெற்றி பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
அரசியல் பிரசாரங்கள் ஏதும் தேவையில்லை என்று குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தற்போது அரசியல் விளம்பரங்களை பலப்படுத்திக் கொள்ள விளம்பரத்திற்கு மாத்திரம் பாரிய நிதியினை செலவழித்துள்ளது.
கம்பெரலிய செயல்திட்டத்திற்கு மாத்திரம் பல கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப் பணம் அரசியல் பிரசாரத்திற்கு மோசடி செய்யப்படுகின்றமையினை எதிர்த்து நீதிமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளோம். அமைச்சரவையின் பிரதானி என்ற ரீதியில் ஜனாதிபதி தேசிய நிதி அரசியல் விளம்பரத்திற்காக மோசடி செய்யப்படுகின்றமையினை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.