முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக வந்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22ஆம் திகதி சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்து மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டன. மேலும் ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
மூன்றாவது முறையாக கடந்த 12ஆம் திகதி சென்னை வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் இரண்டாவது முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஸ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினரும் முதல்வருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களின் ஆலோசனையின்படி முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையிலிருந்து 2 பெண் பிசியோதெரபி டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, லண்டன் டாக்டர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்களின் ஆலோசனைப்படி அப்போலோ டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

