இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் ´அத கொட்டா´ என்பவருக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனில் சம்பிக்க விஜேசிங்கவுக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், 4 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கின் வாதிக்கு 250,000 ரூபாய் நஷ்ட ஈட்டு பணம் வழங்குமாறும், தவறினால் மேலதிக 2 வருட சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டில் தெரணியாகல பகுதியில் வசித்த ஒருவரிடம் காணிச் சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிற்காகவே குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் விசாரணையின் பின்னரே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

