உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

272 0

உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள், 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உணவு பாதுகாப்புத் தினம் அறிமுகம் செய்யப்பட்டது.

வருடம் தோறும் ஜூன் மாதம் 7ஆம் திகதி இந்நிகழ்வு இடம்பெற்றுவருகிறது. உலக உணவு தினத்தின் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளானது, ‘உணவு பாதுகாப்பானது சகலரினதும் கடமை’ என்பதாகும்.

தரமான உணவு நிலையான வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் அத்தியாவசியமானது. பாதுகாப்பற்ற உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்லாது, பல நோய்களையும் ஏற்படுத்திவிடும்.

உலக சுகாதார அமைப்பு, இந்த விடயம் தொடர்பாக கணிப்புகளை முன்னெடுத்துள்ளது. அக் கணிப்பீட்டுக்கமைய, பாதுகாப்பற்ற உணவுகளை உட்கொள்வதால், வருடாந்தம் மில்லியன் கணக்கானோர் உலகில் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன், 5 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உணவு தொடர்பான நோய்களால் வருடாந்தம் 125,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்