சிங்கள தாய்மாருக்கு கருத்தடைசெய்த வைத்தியரை பாதுகாக்கவும் அதுதொடர்பான தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளரை கைதுசெய்யவும் குற்றப்புலனாய்வுப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அத்துடன் வைத்தியருக்கு எதிராக வாக்குமூலம் தெரிவிக்க வருபவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் அவர்களின் வாக்குமூலங்களை மாற்றி தெரிவிக்குமாறும் பலவந்தப்படுத்தியுள்ளனர். இதனை நிரூபிக்கவும் தயாராக இருக்கின்றேன் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி கட்சிக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வைத்தியர் ஷாபி தொடர்பான செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளரை கைதுசெய்யவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் குற்றமற்றவர் என தெரிவிக்கவும் குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் அனுமதியுடனே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிராக பல ஊடக அமைப்புக்கள் வெளிநாட்டுப்பணத்துக்கு போராட்டங்களை நடத்தின. ஆனால் அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதிய ஊடகவியலாளருக்கு ஆதரவாக எந்த ஊடக அமைப்பும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதுவதை தடுக்கவே குறித்த ஊடகவியலாளரை கைதுசெய்ய குற்றப்புலனாய்வு பிரிவு முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின் ஆதரவுடனே அடிப்படைவாதம் போஷிக்கப்படுகின்றது.
வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சரியான விசாரணைகள் இடம்பெறுவதில்லை. அதேபோன்று சொத்துக் குவிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் வைத்தியருக்கு எதிராக வாக்குமூலம் தெரிவிக்க வருபவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் அவர்களின் வாக்குமூலங்களை மாற்றி தெரிவிக்குமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவு இதனை மறுக்குமாயின் அதனை நிரூபிக்க தயாராக இருக்கின்றேன்.
அதனால் அடிப்படைவாதத்துக்கு ஆதரவளித்துவந்த ரிஷாத் பதியுதீனை தூய்மைப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்திருக்கும் குற்றப்புலனாய்வு பிரிவு, தற்போது வைத்தியர் ஷாபியும் குற்றமற்றவர் என தெரிவித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது. குற்றப்புலனாய்வு பிரிவை அரசாங்கம் இந்த நிலைக்கு ஆக்கியுள்ளது. அதனால் இவ்வாறு செயற்படும் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து சாதாரண மக்களுக்கு நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் அடிப்படைவாதிகளை பாதுகாக்கும் இராஜ்ஜியமாக இந்த நாடு மாறியுள்ளது என்றார்.