உயர்மின் கோபுரம் அருகில் சென்றாலே பாயும் மின்சாரம்- தன்னைத் தானே சோதனை செய்த எம்.பி.!

463 0

ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி, உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தபோது அதன் விளக்கு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உயர்மின் கோபுரங்கள் அருகே சென்றாலோ, அதன்கீழ் விவசாய பணிகளில் ஈடுபட்டாலோ மின்காந்த புலன் பாய்ந்து பாதிப்புகள் ஏற்படும் என்றும் மின்கசிவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறி வருகிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி நேற்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று ஆய்வு செய்தார். அப்போது உயர்மின் கோபுரத்தின் கீழ் பகுதியில் மின்சாரம் பாய்கிறதா? என்பதை கண்டறிய தன்னுடைய உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தார். உடனே டெஸ்டரில் இருந்த விளக்கு ஒளிர்ந்து மின்சாரம் பாய்கிறது என்பதை காட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உயர்கோபுரம் அருகே சென்றாலே உடலில் மின்சாரம் பாய்ந்து டெஸ்டர் விளக்கு எரிந்ததை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது. இதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை பாராளுமன்றத்தில் காட்டி பேசுவேன். மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி, மின்சாரத்துறை மந்திரியிடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன்’ என்றார்.