வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறையாததால் கோடை காலம் நீண்டுகொண்டே செல்வதை பொதுமக்கள் உணர்ந்து வருகின்றனர். வெப்பத்தின் காரணமாக குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரங்கள் எல்லாம் முற்றிலும் வறண்டு போய் கிடக்கின்றன.
இந்தநிலையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் தகவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் அனல் காற்று வீசும்.
எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சூரியனின் வெப்ப கதிர்கள் தங்கள் மீது நேரடியாக படும்படி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். கடல் காற்று வீசத் தொடங்கிய பின்னர் தான் வட மாநிலங்களில் வீசும் அனல் காற்று படிப்படியாக குறையும்.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 88 டிகிரி ஆகவும் பதிவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.