யாழில் காணிப்பிணக்கு,இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை!

396 0

யாழ்ப்பாணத்தில் காணிப் பிணக்கு காரணமாக இளம் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார்.

இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது.

“காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது. அதனையடுத்து பெரியதந்தையார் கத்தியுடன் சென்று கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகனுக்கு வயிற்றில் குத்திய நிலையில் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.

தொடர்ந்து கத்தியால் குத்தியவர் துவிச்சக்கர வண்டியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையம் செல்லும் வழியில் பெறாமகளைக் கண்டு அவரைக் கத்தியால் முற்பட்ட போது, குறித்த பெண் பெரியதந்தையாரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணை பெரியதந்தையார் துரத்திச் சென்றுள்ளார். ஓடிச் சென்ற அந்தப் பெண் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்தநிலையில், அவரது கழுத்தை அறுத்து பெரியதந்தையார் கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 30 வயதுடைய பாலசிங்கம் சரிதா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதுடன், 35 வயதுடைய பாலசிங்கம் ஜெயபாலன் என்பவர் காயமடைந்துள்ளார்.