மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடுவைகோ குற்றச்சாட்டு

225 0

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மோசடியாக நடந்த மாணவர் சேர்க்கையினால், தகுதியுள்ள பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தகுதியில்லாத பலர் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண்கள், இளநிலை பட்டப்படிப்பில் 50 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் என்ற அளவில் சேர்க்கை நடத்துகையில், மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அனைத்தும் மூடு மந்திரமாகவே நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த விவரங்கள் எதுவும் தெரியாத மாணவர்கள் பலர், இன்னமும் பல்கலைக் கழகத்தின் வலைத்தளத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் தாங்கள் செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்பதற்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், நுழைவுச் சீட்டு அறிவிப்புகள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டனர். இது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து தக்க விசாரணை நடத்த வேண்டும். முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். தகுதியுடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.