காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

218 0

பதுளையில் காணாமல் போயிருந்த மாணவியொருவர் இரு தினங்களுக்கு பின் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கபட்டுள்ளார்.

பதுளை – இசுருவுயன பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை காணமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை முற்கபல் 7 மணியளவில் லொக்கல்ல ஓயாவிலிருந்து மாணவியின் சடலம் மீட்கபட்டதாக கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

19 வயதுடைய குறித்த மாணவி பதுளையின் பிரபல பாடசாலையில் ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன்,  இம்முறை க. பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மேலதிக வகுப்புக்காக சென்ற மாணவி வகுப்பு முடிந்து வீடு திரும்பாமை குறித்து உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது மாணவியுடையது என கருதப்பட்ட சில பொருட்களை லொக்கல்ல ஓயாவிற்கு அருகில் காணப்பட்ட புதருக்குள் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். பின்னர் குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்டு பொலிஸார் ஓயாவின் புதருக்குள் சிக்கியிருந்த மாணவியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பொலிஸார் உயிரிழப்புக்கு காரணம் கொலையா தற்கொலையா என்பது குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

மாணவி பாடசாலையில் இரு மாவர்களிடம் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதில் ஒரு மாணவருடன் அன்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்று வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளாதக கூறப்படுகின்றது.

சடலம் இன்றைய தினம் பதுள்ளை நீதவான் முன்னிலையில் மீட்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக அது பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மரண பரிசோதனையின் பின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.