கஜேந்திரகுமாரும் நானும் இணைந்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை – சி.வி.

268 0

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே தான் விரும்புவதாகத் தெரிவித்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரன், அவருடன் இணைந்து செயற்பட்டால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூக சேவையாளரும், பிரசித்த நொத்தாரிசும், சட்ட ஆலோசகருமான க.மு.தருமராஜாவின் நினைவுப் பகிர்வு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

பலமுள்ள கொள்கைப் பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் சேர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்த தருமராஜா எனக்கு சார்பாக கஜந்திர குமாரிடம் சிபாரிசு செய்திருப்பார். கொள்கைப் பற்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர்  அறிந்திருந்ததால் கஜந்திர குமாரிடமும் கட்சி அங்கத்தவர்களிடமும் பேசி நிலைமையை புரிய வைக்கக் கூடிய ஒருவராகவே அவர் இருந்தார்.

எனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் முரண்பாடு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இல்லாதது கஜேந்திரகுமாருக்கு ஆறுதல் தான். கட்டாயம். நான் கூறுவதை ஏற்குமாறு கஜனை வற்புறுத்தி இருப்பார். காரணம் இன்றைய நிலை அப்படி என்பதை நண்பர் நன்றாக அறிந்திருந்தவர்.

வடகிழக்கை துண்டாட, படையினரை நிரந்தரமாக வட கிழக்கில் வைத்திருக்க, தமிழ் பேசும் மக்களை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கத் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் யாவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளதை அவர் அறிந்திருந்தார்.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடகிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருவதை நன்கறிந்திருந்தார் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.