சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

285 0

இலங்கையில் உள்ள சகல மதுபான சாலைகளும் 2 நாட்கள் பூட்டப்பட வேண்டும் என அரசு அறிவித்த நிலையில் வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 ​பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் முடமாவடி மதுபான சாலைக்கு முன்பாக வைத்து இன்று காலை 8 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை பொஷன் போயாவை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபான சாலைகளை மூடுவதற்கான அறிவுறுத்தலை மதுவரித் திணைக்களம் நேற்று வழங்கியது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் முடமாவடி மதுபான சாலைக்கு சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் பாரவூதியில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பாரவூர்தியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கால் போத்தல் அளவுடை மதுபானப் போத்தல்கள் 450 கைப்பற்றப்பட்டன. பாரவூர்திச் சாரதி மற்றும் இருவரே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.