அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் பகுதியில் 51 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு மழை பெய்து வந்தது. இதனால் தெளிவான வானிலை காணப்படாத நிலையில், ஹெலிகாப்டர் ஒன்று திடீரென அந்த கட்டிடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதுபற்றி நடந்த முதற்கட்ட விசாரணையில், ஹெலிகாப்டர் அவசரகால தரையிறக்கம் செய்ய முயன்றுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக கட்டிடத்தின் மேற்கூரையில் இறங்க முற்பட்டு உள்ளது. இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.
இதில் பயங்கரவாத செயல் எதுவும் இல்லை என நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ கூறியுள்ளார். ஹெலிகாப்டர் மோதியவுடன் தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் அதன் விமானி உயிரிழந்து விட்டார். கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஹெலிகாப்டர் மோதியதில் கட்டிடம் குலுங்கியுள்ளது. இதனை உணர்ந்த அங்கிருந்த சிலர் கட்டிடத்தில் இருந்து தப்பியோடி உள்ளனர்.
இந்த விபத்து பற்றி அதிபர் டிரம்புக்கு விளக்கமுடன் கூறப்பட்டு உள்ளது. தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.