மனோ கணேசன் பழைய செம்மலை நீராவியடி ஆலயத்திற்கு நாளை விஜயம்

225 0

சர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் நாளை திங்கட்கிழமை திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அமைச்சர் மனோ கணேசன் நேரடி விஜயம் செய்யவுள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ. ஏ. புஷ்பகுமாரவுக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் விடுத்துள்ள பணிப்புரைகளின்படி இரண்டு மாவட்ட செயலகங்களிலும் அனைத்து தரப்புகளையும் அழைத்து இரண்டு கூட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணிக்கு திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பிலும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு முல்லைத்தீவு நீராவியடி விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பில் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.