அதிமுகவில் இரட்டை தலைவர் பதவி- மேலும் ஒரு எம்எல்ஏ எதிர்ப்பு

222 0

இரட்டை தலைமை வேண்டாம் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே, இன்னொரு அதிமுக எம்எல்ஏவான ராமச்சந்திரனும், இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க. பின்னர் ஒன்று சேர்ந்தது.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து அ.தி.மு.க.வை தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளை இருவரும் ஒன்றாக கையெழுத்திட்டே வெளியிட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா இருந்தவரையில் அ.தி.மு.க.வில் அதிகாரமிக்க பதவியாக பொதுச்செயலாளர் பதவி இருந்தது. அந்த பதவியில் பல ஆண்டுகளாக கோலோச்சிய ஜெயலலிதா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இல்லை. இது தொடர்பாக பொதுக்குழுவை கூட்டி கட்சியில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டன.

இதன்படியே ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகே அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை உருவானது. இந்த இரட்டை தலைமைக்கே இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அ.தி.மு.க. முன்னணி நிர்வாகியான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மதுரையில் நேற்று திடீரென பேட்டியளித்தார்.

அப்போது அவர், அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை போன்று அதிகாரம் மிகுந்த ஒரே தலைமை உருவாக வேண்டும். இரட்டை தலைமையால் யார் முடிவெடுப்பது? என்கிற குழப்பம் கட்சியில் இருப்பதாக கூறிய அவர், பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ராஜன்செல்லப்பாவின் இந்த கருத்து அ.தி.மு.க.வில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வில் தலைவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தொண்டர்களால் ஆளப்படும் இயக்கம் இது. அ.தி.மு.க.வில் எல்லோருமே தலைவர்கள்தான் என்று கூறினார். அதே நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ராஜன்செல்லப்பாவின் பேட்டி தொடர்பாக பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன், சுயநலமில்லாத தலைவர்கள் வேண்டும் என்று கூறியுள்ளார். உடல்நல குறைவு காரணமாக கேரளாவில் சிகிச்சை பெற்று வரும் அவர் தனது கருத்தை வீடியோவில் பதிவு செய்து ‘வாட்ஸ்அப்’பில் வெளியிட்டுள்ளார். அதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ள கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொல்வது போல் ஒற்றை தலைமையும் வலிமையான தலைமையாக சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கழகமே தனது குடும்பம் என உருவாக்கி காத்திட்ட அ.தி.மு.க.வை யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும் சரி, பிளவுப்படுத்த எண்ணினாலும் சரி, அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு சசிகலாவாகத்தான் தொண்டர்கள் நினைப்பார்கள்.

இதனை தலைவர்கள் புரிந்து கொண்டு கழகத்திற்காக தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டும். அதனை விட்டு விட்டு தங்களது குடும்பத்திற்காக கட்சியை வளைக்க நினைப்பது என்னை போன்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க.வில் குழப்பத்தையோ, உள்கட்சி பூசலையோ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியின் நலன் கருதியே எனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு மத்திய மந்திரி கேட்டதாக வெளியான செய்திகள் வருத்தத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க- காங்கிரஸ் செய்த தவறுகளை அ.தி.மு.க. மக்களிடம் எடுத்துச் செல்ல தவறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இரட்டை தலைமை வேண்டாம் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே, இன்னொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனும், இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.