திருகோணமலை – மலைமுந்தல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கை இன்று சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, மீன்பிடிப்படகொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிக்கு விரைந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்தது.
சந்தேக நபர்கள் 18 மற்றும் 27 வயதுடைய ஈச்சலம்பத்து பகுதியை சேர்ந்த ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து , டிங்கி படகொன்று, மற்றும் எஞ்சின் படகு என்பனவும் சட்டவிரோத மீன்பிடி வலை என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வள முகாமைத்துவ பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

