ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் நிச்சயம் பரந்துப்பட்ட கூட்டணியமைக்கப்படும். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.
அதன்படி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறம் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளரான இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்பது சுதந்திர கட்சியின் நிலைப்பாடு. இதே போன்று பொதுஜன பெரமுனவின் உறூப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. இவ்வாறான வேறுப்பட்ட கருத்துக்களினால் பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இரு தரப்பிலும் இருந்து எழுகின்ற மாறுப்பட்ட அரசியல் கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு உறுதியான திருப்திகரமான தீர்வை பெறுவதற்காகவே தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இரண்டு பிரதான கட்சிகளின் அரசியல் கொள்கைகளும் தற்போது ஒருமித்த தீர்வை கொள்கையினை பெறுவதற்கு இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பிற்கு அமைய நிச்சயம் பரந்துப்பட்ட கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி வெற்றிகரமாக அமைந்தால் ஜனாதிபதி வேட்பாளர் யார் பிரதமர் யார் என்ற பிரச்சினைகள் ஒருபோதும் ஏற்படாது. ஐக்கிய தேசிய கட்சிக்க சவால் விடும் அளவிற்கு இரு தரப்பினரும் பலமாக செயற்படுவோம் என்றார்.