அடிப்படைவாதத்தை மிக சூட்சமமான முறையில் பாதுகாத்துள்ளார்கள்- உதய

254 0

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பதிலாக    அரசாங்கத்தில் பதவி  வகித்த அனைத்து  முஸ்லிம் அரசியல்வாதிகளும்   இன்று  அடிப்படைவாதத்தை   மிக  சூட்சமமான    முறையில்  பாதுகாத்துள்ளார்கள்.

இவர்களின் முறையற்ற செயற்பாடுகளினால்    சாதாரண   முஸ்லிம் மக்களே    பாதிக்கப்படுவார்கள். என பாராளுமன்ற உறுப்பினர்   உதய கம்மன்பில தெரிவித்தார்.

குருநாகல் வைத்தியர்  ஷாபி  தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வைத்திய சபைக்கு  முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறளுக்கும் அப்பாற்பட்டு   பாரிய  குற்றம்  செய்துள்ளார்  என்று    குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  குருநாகல்  வைத்தியசாலை  வைத்தியர் சேகு   சிஹாப்தீன்   மொஹம்மட்  ஷாபி  விவகாரத்தில்   இலங்கை  வைத்திய  சபை  தமது பொறுப்புக்களை மீறியுள்ளது.

இஸ்லாமிய  அடிப்படைவாதத்தினால்    முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து  மக்களும் இன்று    அடிப்படைவாதத்தினால்   பாதிக்கப்பட்டுள்ளார்கள்.    இதற்கு  மூல காரணியாகவுள்ள   அமைச்சர்  ரிஷாத் பதியுதீனுக்கு   எதிராக  மாத்திரமே  நம்பிக்கையில்லா பிரேரணையை   கொண்டு  வந்தோம்.

சாட்டப்பட்ட   குற்றங்கள்   போலியானது என்று   நிரூபிக்குமாறு   அமைச்சர்  ரிஷாத் பதியுதீனுக்கு  ஆலோசனை  வழங்குவதை விடுத்து  முஸ்லிம்  அமைச்சர்கள் அவருக்கு சார்பாக செயற்பட்டுள்ளமை  அரசியல் ரீதியில் அவர்கள்  செய்த   ஒரு   தவறாகும்.

இஸ்லாமிய  அடிப்படைவாதத்தை  இல்லாதொழிப்பதற்கு  பதிலாக  இன்று  அனைத்து  முஸ்லிம் அரசியல்வாதிகளும்    அடிப்படைவாத்தை   பாதுகாக்க முற்பட்டுள்ளமை   பொறுப்பற்ற செயற்பாடாகும்.

இவர்களின் செயற்பாடு  எதிர்காலததில்  ஏற்பட   கூடிய  விளைவுகளுக்கு   தற்போதே அடித்தளமிட்டுள்ளது நாட்டு  மக்களே அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க   ஜனநாயக ரீதியில்   பலமான  அரசாங்கத்தை     ஏற்படுத்த வேண்டும் என்றார்