சிங்கள பேரினவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டுள்ளது – சிறிதரன்

322 0

நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது. மதவாதத்திற்கும், பேரினவாதத்திற்கும் இடையில் சிக்குண்டு நாடு அழியப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே இவ்விடயம் அமைந்திருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

 

தற்போது நாட்டில் காணப்படும் நிலை மிகப் பயங்கரமான செய்தியொன்றை நாட்டிற்கும், உலகத்திற்கும் கூறுகின்றது. நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது. பௌத்த பிக்குகள் அரசியலைக் கையிலெடுத்துச் செயற்படுகின்றார்கள். அதன் விளைவு சிறுபான்மையின மக்களை அடக்கியொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. அதன்மூலம் இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்கள் ஒருபோதும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழமுடியாது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயற்பாடுகள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. பௌத்த தேரர்கள் போராட்டம் நடத்தினால் அதற்கு ஏற்றவாறு அரசாங்கமும் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோருக்கான நீதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கடந்த பல வருடகாலமாக தமிழ் மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். எனினும் அவை தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எவ்வித தீர்வையும் வழங்கவில்லை. ஆனால் அத்தனை பாரதூரமற்ற ஒரு விடயத்திற்கு ஒரு தேரர் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறியிருக்கின்றன. இதன் ஊடாக சிங்கள பேரினவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டிருக்கின்றது.

இந் நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள், நாளை இன்னொரு ‘மற்றவர்’. எவ்வாறெனினும் முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து நாம் தோழமையோடு நிற்போம் என்றார்.