கடும் வரட்சியால் வீதிக்கு வந்த உயிரினத்தால் பதற்றம்!

321 0

வவுனியா மடுகந்தை பகுதியில் வீதிக்கு வந்த 7 அடி நீளமான முதலையால் இன்று காலை குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

வவுனியா மடுகந்தை அம்பலாங்கொட பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 7 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மடுகந்தை பொலிசார், வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

தச்சன்குளத்தில் இருந்தே நீர்நிலை தேடி குறித்த முதலை ஊர்மனைக்குள் வந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வவுனியாவில் நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக குளங்களில் உள்ள நீர் வற்றிக்காணப்படுவதனாலே இந்நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.