வெளிநாட்டு அகதிகளுக்கு உதவச் சென்றவர்களை திரும்பி அனுப்பிய இராணுவம்!

241 0

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கச் சென்றவர்கள், இராணுவத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நீர்கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக ஒரு பகுதியினர் இன்று பூந்தோட்டம் முகாம் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

வவுனியா நகரில் இருந்து மூன்று முச்சக்கர வண்டியில் நிவாரணப் பொருள்களுடன் அவர்கள் சென்றிருந்த நிலையில், வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம் பகுதியில் மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பட்டது. வருகை தந்தவர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்ட இராணுவத்தினரும், பொலிஸாரும் அவ்வாறு நிவாரணப் பொருள்களை வழங்க முடியாது எனத் தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.