கூண்டோடு கோழி திருடிய இரு சந்தேகநபர்களுக்கு அபராத தொகை அறவிட்டதோடு மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நாவற்குழி 300 வீட்டு திட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் கோழிக்கூட்டுடன் , கோழி , முட்டை என்பவற்றை கடந்த ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி திருடி சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நாவற்குழி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது அவர்கள் தாமே திருடியதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தனர்.
குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர். அதன் போது அவர்கள் , தாமே திருடியதாகவும் , திருடிய கோழிக்கூடு கோழிகள் , முட்டைகள் என்பவற்றை யாழ்ப்பாணத்தில் விற்று விட்டதாகவும் மன்றில் தெரிவித்தனர். அதனை அடுத்து அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது , முதலாம் சந்தேநபருக்கு 6 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்த மன்று உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இரண்டாம் சந்தேகநபருக்கு ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்ததோடு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

