முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் மர நடுகை நிகழ்வுகள்!

364 0

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதனை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுடன் மர நடுகை நிகழ்வுவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவு தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் அவர்களுக்காக ஒரு மரத்தினை நாட்டி அதை வளர்ப்பதன் மூலம் அவர்களின் நினைவினை பயனுள்ளதாக்க முடியும் என்பதை குறித்துரைத்து இந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

குறிப்பாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய தமிழர் வாழும் பகுதிகளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், கிளிநொச்சியில் சில பாடசாலைகள் மற்றும் மீனவர் சமாசத்திலும், பூநகரி பிரதேச வைத்தியசாலையிலும் மரம் நடும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.