பயங்கரவாத செயற்பாடுகளை முஸ்லிம் மக்கள் மீது சுமத்த வேண்டாம்- சுனில்

333 0

கடந்த மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய ஜனாதிபதியும் பிரதமரும் தமது பொறுப்பில் இருந்து நழுவியுள்ளனர். பிரதமர் தனக்கு பாதுகாப்பு அமைச்சில் இடம் இல்லை என்றும் ஜனாதிபதியோ தனக்கு தெரியாது என்றும் கூறி நழுவுகின்றனர்.

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார். திருகோணமலை குளக்கோட்டன் தோப்பில் தந்து கட்சி ஆதரவாளர்களிடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

இவர்கள் தான் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள முடிகிறதா இதனை மாற்ற வேண்டும் இதனை ஜே .வி .பி செய்யும் என்றார்.

மேலும் தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளை முஸ்லிம் மக்கள் மீது சுமத்த வேண்டாம். அதேபோல் இந்த தாக்குதலை விடுதலைப் புலிகளுடனும் ஒப்பிட வேண்டாம்.

விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. இறுதியில் தான் தற்கொலை தாக்குதல் என்ற மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்டார்கள்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, கல்வி சமத்துவமின்மை என்பவை விடுதலைப் புலிகளை இந்த நிலப்பாட்டுக்கு மாற்றியது என்றார். தொடர்ந்து பேசிய அவர்,

கடந்த 2 நாட்களுக்கு முன் குளியாபிட்டிய, மினுவாங்கொட, நிக்கவெரட்டிய போன்ற பல இடங்களில் சிங்கள சஹ்ரான்கள் மதுபோதை சஹ்ரான்கள் என்ன செய்தார்கள். அப்பாவிகளின் உடமைகளையும் உயிரையும் குடித்து பல கோடிகளை எரித்து நாசம் செய்தார்கள்.

இந்த சிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்குகிறார்கள். இதுதான் இந்த நாட்டின் தலைவிதி என்று குறிப்பிட்டார்.