உலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை

433 0

உலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.மும்பை கப்பரேடே பகுதியில் உலக வர்த்தக மைய கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த கட்டிடத்தின் 30-வது மாடியில் இருந்து ஒருவர் திடீரென கீழே குதித்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ஹரிந்தர் கபாடியா(வயது51) என்பதும், அவர் ஜி.எஸ்.டி. சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 7 மாதங்கள் வரை விடுமுறையில் இருந்த அவர், 3 மாதத்துக்கு முன்னர் தான் அவர் பணிக்கு திரும்பினார் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் உடல் நலக்குறைவு சரியாகாததன் காரணமாக மனஅழுத்தத்தால் அவர், இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.