சவூதியில் சிக்கினார் ஆயுதப் பிரிவின் பிரதானி மில்ஹான்

246 0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும், அத் தாக்குதலுக்கு முன்னதாகவே சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்ற, தேசிய தெளஹீத் ஜமாத்தின் பயங்கரவாத குழுவின் ஆயுதப் பிரிவு பிரதானி மில்ஹான் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையில் இருந்து சவூதிக்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழு, இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் தலையீட்டுடன்  சவூதி அரேபிய தீவிரவாத ஒழிப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இதன்போது, மேலும் மூன்று பயங்கரவாத சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயர் மட்ட பாதுகாப்பு தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது. இவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சவூதி அரேபியாவுக்கு சென்றவர்கள் என கூறப்படும் நிலையில் அவர்கள் மூவரும் தற்கொலை குண்டுத் தாக்குதல் பயிற்சி பெற்றவர்கள் என அரியப்படுவதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.