பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை!

408 0

இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டாலும் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவர்கள் வேறு எந்த வழியிலும் மீண்டும் வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

 

புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட பல உண்மைகள் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பினால் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவரினால் இஸ்லாமிய இராச்சிய அழைப்பு விடுத்தபோது பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் சிரியா சென்று இணைந்து கொண்டனர். இலங்கையில் இருந்தும் சிலர் சென்றதாக புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. 2014 ஆம் ஆண்டில் இவர்கள் சென்றுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது. துருக்கி ஊடாக சென்றதாகவே கூறப்படுகின்றது.

எனினும் 2014 ஆம் ஆண்டின் பின்னர் இஸ்லாமிய இராச்சியம் உருவாக்கப்பட்ட பின்னர் இங்கிருந்து சிரியா சென்று ஆயுத பயிற்ச்சி பெற்று இங்கு வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. கொல்லப்பட்ட நபர்கள் அனைவரும் சிரியா சென்று ஆயுத பயிற்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் கைதுசெய்யப்பட்டுள்ள சிலரும் சிரியா சென்று பயிற்ச்சி பெற்றதாக அறியமுடிந்துள்ளது.

இந்த தாக்குதலின் பிரதான நபராக கருதப்படும் சஹரான் என்ற நபர்  2015ஆம் ஆண்டு சிரியா சென்றுள்ளதாகவும் துருக்கியில் இருந்து சிரியாவுக்கு சென்ற  பொது அவரது பெற்றோம் மற்றும் உறவினர்களும் சிரியாவுக்கு சென்றுள்ளனர் என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அவரது பெற்றோர் சிறிது காலம் சிரியாவில் தங்கியிருந்து 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகின்றது. இந்த பயங்கரவாத நகர்வுகளில்  18 தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அதற்கான இடம் வழங்கப்படவில்லை என்பதும் பாதுகாப்பு அறிக்கை கூறுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இதனை சர்வதேச ஒத்துழைப்புடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கான சகல தரப்புடன் இணைந்து புலனாய்வு தகவல்களை பரிமாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும்.