பள்ளிவாசல்களை இலக்கு வைத்துள்ள மற்றுமொரு தீவிரவாத குழு – அதிர்ச்சித் தகவல்

271 0

முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றுமொரு தீவிரவாதக் குழு திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய பள்ளிவாசல்களை இலக்கு வைத்து மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்காக உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.

ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் அந்த தகவல்களின் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.