சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவுக்கோ சம்பிக்க ரணவக்கவுக்கோ வழங்கி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
விடுதலைப்புலி அமைப்பு படிக்காத இளைஞர்களை பயன்படுத்தியே குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டது. ஆனால் இப்போது படித்த, பணம் படைத்தவர்களை பயன்படுத்திக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இது ஆபத்தானதாகும். அதனால் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பயனில்லை. ஒருவருக்கொருவர் விரல் நீட்டாமல் இணைந்து செயற்படுவதன் மூலமே இதற்கு முகம்கொடுக்க முடியும்.
அரசாங்கம் என்ற வகையில் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்திய புலனாய்வுத் தகவல் 4 ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் எமக்கு தெரியாது என கூற முடியாது. நாட்டின் தலைவரான ஜனாதிபதியும் தெரியாது என்கின்றார்.
அப்படியென்றால் யாருக்கு இந்த தகவல் சென்றது என்ற பிரச்சினை இருக்கின்றது. பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் அந்த தகவல் சென்றுள்ளதாகவே கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் தாக்குதல் சம்பவத்தில் 350 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மலையக மக்கள் ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்ததில்லை. நானும் ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்ததில்லை. அதனால் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நடவடிக்கை எடுக்க இந்த பக்கத்தில் திறமையானவர்கள் இருக்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கோ அல்லது பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கோ வழங்க வேண்டும். இந்த நேரத்தில் சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்றார்.Share