அமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது!

373 0

யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமெரிக்க நாட்டச் சேர்ந்தவர், முஸ்லிம் இளைஞர் மற்றும் தமிழ் பெண் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் விசேட தேடுதல், சோதணை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் பொது மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் மற்றும் இரகசிய தகவல்களைக் கொண்டு உடனடி நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனடிப்படையில் யாழ்.பொலிஸாருக்கு நேற்று நண்பகல்  தொலைபேசி அழைப்பு ஒன்றின் ஊடாக நல்லூர் பின் வீதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் சந்தேகிக்கப்படும் வகையில் நடமாடித்திரிபவர்கள் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டிருந்தது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகிக்கப்படும் வகையில் அங்கு நீண்டநேரமாக நடமாடியவர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர். 

விசாரணையின் போது மூன்று நபர்களும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர். இதனால் குறித்த நபர்கள் தொடர்பில் சந்தேகித்த பொலிஸார் அவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பறிமுதல் செய்ததுடன், அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

யாழ் தலமை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோ முன்னிலையில் முற்படுத்தப்பட்ட 3 பேரும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இவ்விசாரணையின் ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் என்பது தெரியவந்தது. அவர் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்தாகவும் தெரிவித்தார். 

மூவரில் மற்ருமொருவர் தமிழ் பெண் என்றும், சாட்டிப் பகுதியில் உள்ள ஒரு குருபீடத்தில் பணிபுரிபவர் என்றும் தெரியவந்தது. 

மற்றவர் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சுற்றுலா நோக்கத்துடன் வந்தவர் என்றும் பொலிஸாரிடத்தில் தெரிவித்தார். 

கைதான ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரனான தகவல்களை தெரிவித்ததை அடுத்து, அவர்களை தடுத்து வைத்து தொடர் விசாரணை செய்யுமாறு பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

இதனடிப்படையில் 3 பேரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.