மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

239 0

மோட்டார் சைக்கிள் ஒன்றும்  முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

புன்னாலைக்கட்டுவன் யோகேந்திரன் தமிழரசன் (வயது-19) என்பவரே குறித்த விபத்தில்  உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினர்.

அத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மதுபோதையிலிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அவரது மோட்டார் சைக்கிளிலிருந்து மதுப் போத்தல் ஒன்று மீட்கப்பட்டதாகவும் கூறினர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞனும் முச்சக்கர வண்டிச் சாரதியும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்