ஐ.தே.க விடமிருந்து ஆட்சியினை பெறும் வரையில் எதிர்க்கட்சியாகவே செயற்படுவோம் – மஹிந்த

272 0

 ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சியில் இருந்து  விலகவில்லை.  ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து ஆட்சியினை  பெறும் வரையில்  எதிர்க்கட்சியாகவே செயற்படுவோம்.நாட்டில் மூன்றாவது  பலம் வாய்ந்த  அரசியல் கட்சியாக அறிமுகமான பொதுஜன பெரமுன   இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில்   பெரும்பாலான   உள்ளுராட்சி மன்றங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது என  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

 தங்காலை நகரில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 எஸ். டப்ல்யு. ஆர்.  டி . பண்டார நாயக்க  மற்றும் டி. ஏ ராஜபக்ஷ  ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி   ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியை ஸ்தாபித்தார்கள்.   சுதந்திர கட்சி   உருவாக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் எவரும் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. கடந்த பொதுதேர்தலில் எமக்கு    வாக்குகள் கிடைக்கப் பெற்றது ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றினைந்து  அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதற்கு அல்ல.

 ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றினைய கூடாது என்பதற்காகவே  பொதுஜன  பெரமுன  உருவாக்கப்பட்டது.  இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில்  பெரும்பாலான  உள்ளுராட்சி மன்றங்களில் பொதுஜன பெரமுன  வெற்றிப் பெற்றுள்ளன.     ஆட்சி மாற்ற்த்தை ஏற்படுத்திய நோக்கம்  இன்று நிறைவேற்றப்படவில்லை. மாறாக பல நெருக்கடிகளே ஏற்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இரண்டு வருட காலம் அரசியல் பழிவாங்களுக்காக  இடை நிறுத்தப்பட்டன.  அபிவிருத்திகளின் குறைப்பாடுகள் காணப்படுமாயின்  அதனை பரிசீலனை செய்யுங்கள் ஒரு சில  காரணிகளினால்   அபிவிருத்திகள் தடைப்பட்டால்.  பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எடுத்துரைத்தும்  அவர் பொருட்படுத்தவில்லை.  

 தற்போதைய அரசாங்கம்  தேர்தல் காலத்தில்  அபிவிருத்தி ரீதியில் முன்வைத்த வாக்குறுதிகள் எதனையும்  நிறைவேற்றவில்லையென அவர் தெரிவித்தார்.