வேலூர் தொகுதியுடன் குடியாத்தம்- ஆம்பூர் சட்டசபை தேர்தலை நிறுத்த சதி: கே.பாலகிருஷ்ணன்

197 0

வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி செய்கின்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் எழுச்சியை காண முடிந்தது. தெருமுனை கூட்டம் போட்டால் கூட 2 ஆயிரம் பேர் கூடுகின்றனர்.

இதற்கு மத்திய-மாநில அரசு மீதான வெறுப்பு தான் முக்கிய காரணமாகும்.

பிரதமர் மோடி தமிழகத்துக்காக எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஒக்கி புயல், கஜா புயல், வர்தா புயல் எதற்கும் போதிய நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. புயல் சேதத்தையும் வந்து பார்வையிட வில்லை. விலைவாசி உயர்வால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசை தட்டிக் கேட்கும் நிலையில் மாநில அரசு இல்லை. பிரதமர் மோடி சொல்வதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படியே கேட்கிறார்.

இதனால் தான் தமிழக மக்களுக்கு மோடி மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்காக அவர் பிரசாரத்துக்கு வந்தாலும் மோடிக்கு ஆதரவான எண்ணம் வரவில்லை. அவர் அடிக்கடி பிரசாரத்துக்கு வருவது எங்களுக்கு நல்லது தான்.

வேலூர் தொகுதியில் பணம் பிடிபட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகிறது. எங்களுக்கு வரும் செய்தி என்னவென்றால், வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடப்பதாக அறிகிறோம். எங்களது வேண்டுகோள் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.