வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே சிறந்தது – சுமந்திரன்

253 0

இலங்கையின் சட்ட வரையறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே எனது தெரிவாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறையைக் கோருகின்றார்கள். நாங்கள் ஒரு கலப்பு முறைக்கு இணங்கியிருந்தோம். அந்தவகையில் தற்போதும் கலப்பு முறை தான் சிறந்ததாக எனக்குத் தோன்றுகிறது.

 காரணம் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறை எனின், அது இலங்கையில் வேரூன்றுவது மிகவும் கடினமாகும். அந்தத் தீர்ப்புக்களை எமது நாட்டில் செயற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். ஆகையினாலேயே இலங்கையின் சட்டவரையறைக்குள் கலப்பு நீதிமன்றம் எனது தெரிவாக இருக்கின்றது.

ஆனால் இதைக்கூட அரசாங்கம் செய்யாவிடின், நாங்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கும். அதாவது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஏதாவதொரு முழுமையான சர்வதேசப் பொறிமுறையை நாடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றே கூறியிருந்தேன் என்றார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 40(1) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இவ்வாறு கூறுவதன் ஊடாக அரசாங்கத்தை மிரட்டுவது போன்று தமிழ் மக்களுக்குக் காண்பிக்க முயற்சிக்கின்றாரே தவிர, அவர் உண்மையிலேயே அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கவில்லை எனக் கூறப்படுகின்ற விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு செயற்பாடாகும் என்ற என்னுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை. ஆனால் இவ்விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதை நான் எதிர்ப்பதாக சில தமிழர் தரப்புக்கள் கூறிவருகின்றார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.