தேர்தல் கமிஷனர்கள் சென்னை வருகை அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன் இன்று ஆலோசனை

422 0

இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா உள்ளிட்டோர் தமிழகம் வந்துள்ளனர். இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர்.

அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் விமான நிலைய ஓய்வறையில், இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டம்
பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். அங்கு இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் (பகுஜன் சமாஜ், பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க. என மொத்தம் 10 கட்சிகள்) தலா 9 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதியும், தேர்தல் கமிஷனர்களை தனியாக சந்தித்து கருத்துகளை தெரிவிக்கலாம். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை இந்த சந்திப்பு நடைபெறும். காலை 11.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறும். அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
நாளைய நிகழ்ச்சிகள்
இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வருமான வரித்துறை, சுங்கத்துறை போன்ற முக்கிய துறைகளின் அதிகாரிகள், தேர்தல் தொடர்பு அதிகாரிகளை தேர்தல் கமிஷனர்கள் சந்தித்து பேசுகின்றனர். அந்த கூட்டம் முடிந்த பிறகு 11.15 மணிக்கு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. போன்ற மாநில உயர் அதிகாரிகளுடனான கூட்டம் தொடங்கும். அந்த கூட்டம் பிற்பகல் 12.15 மணிக்கு முடியும்.
பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு செய்தியாளர்களை தேர்தல் கமிஷனர்கள் சந்திக்கின்றனர். அப்போது தமிழகத்தில் எடுக் கப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைக்கப்படும். பின்னர் அவர்கள் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.