திமுகவை மிரட்டும் முயற்சி வெற்றி பெறாது – வைகோ!

325 0

வருமான வரி சோதனையின் உண்மையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இதற்கெல்லாம் தி.மு.க. பயப்படாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. எனவே பா.ஜனதா இயக்கிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது. அதனாலே சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பாரபட்சமாக பயன்படுத்துகிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் உடைய அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் ரூ.100 கோடி வரை கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். பணம் வினியோகம் ஆகப்போகிறது என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் எல்லாம் சோதனைகள் ஏன் நடத்தப்படவில்லை.

இந்த சோதனை மூலம் தி.மு.க.வை மிரட்டி அச்சுறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த முயற்சி வெற்றி பெறாது.

இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமாக இருக்கிறது. சோதனையின் உண்மையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இதற்கெல்லாம் தி.மு.க. பயப்படாது. திமுக கூட்டணி அஞ்சாது.

இவ்வாறு அவர் கூறினார்