சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்கள் அம்பலம்

382 0

ajith-boyagodaதமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர்.

இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, சிறிலங்கா இராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார்.

காரைநகரில் அவரது அனுபவங்கள் குறித்து அந்த நூலில் கூறப்பட்டுள்ள பகுதியை மொழியாக்கம் செய்துள்ளார் நித்தியபாரதி.

“எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு சிறிலங்காவிற்கு வடக்கேயுள்ள தீவுகளில் ஒன்றான காரைநகரில் கடமையாற்றிய போது பலவீனமுற்ற, பாதிக்கப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த வாய்ப்பின் மூலம் போரின் பாதிப்புக்கள் உண்மையில் எவ்வாறானதாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.

அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நான் யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றம் பெறுவதற்காகக் காத்திருந்தேன். எட்டு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டேன். காரைநகரில் இருந்த கடற்படைத் தளமானது முற்றுகைக்கு உட்பட்டிருந்ததால் ஒரு மாதத்திற்கு முன்னரே நான் அங்கு செல்ல வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

கிழக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த போது காரைநகர் கடற்படைத்தளமானது புலிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு செல்லுமாறு கட்டளையிடப்பட்டேன். காரைநகர் கடற்படைத் தளத்திற்குச் செல்வதற்கான கடல்வழிப் பாதை தவிர்ந்த அனைத்து வழிகளையும் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.

A Long Watch

காரைநகர் கடற்படைத் தளத்தின் மீது அன்றிரவு புலிகள் செறிவான மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் செய்திகள் கிடைக்கப் பெற்றன. நான் திருகோணமலையை விட்டுப் புறப்பட்ட வேளையில் எனது சகநண்பர்கள் பலர் மகிழ்ச்சியுடன் எனக்கு விடைகொடுக்கவில்லை. அவர்கள் என்னிடம் வாழ்த்துக் கூடக் கூறவில்லை. நான் மரணத்தைத் தேடிச் செல்வதாகவே அவர்கள் உணர்ந்தனர்.

நாங்கள் கிழக்குக் கரையோர வழியாக ஆயுதப்படகொன்றில் காரைநகர் நோக்கி இரவிரவாகப் பயணம் செய்தோம். நாங்கள் திருகோணமலையைக் கடந்து பின்னர் முல்லைத்தீவு வழியாக பருத்தித்துறையைச் சென்றடைந்து அங்கிருந்து காரைநகரைச் சென்றடைந்தோம். நாங்கள் காலையில் காரைநகரைச் சென்றடைந்தோம். கடல்வழிப் பாதை பாதுகாப்பாக இருந்தது.

காரைநகர் கடலில் கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நாங்கள் குறித்த கடற்படைத் தளத்தைச் சென்றடைந்த போது காயமடைந்த மற்றும் இறந்த படையினர் அருகிலிருந்த பலாலி விமானத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.  ஏனைய படையினர் ஓய்விற்கு அனுப்பப்பட்டிருந்தனர். நாங்கள் கடமையில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு ஓய்வுவழங்கி அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை நியமிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டோம்.

இரவு சராமரியான குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் அதனால் அன்றிரவு தாக்குதல்களை எதிர்பார்த்து விழிப்புடன் இருக்குமாறும் அங்கிருந்து ஓய்விற்காக அனுப்பப்பட்ட படையினர் எம்மிடம் தெரிவித்தனர். குறித்த கடற்படைத் தளத்திற்கான இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியாக நான் கடமையாற்றினேன்.

பகல் நேரத்தில் பெரும்பாலும் யுத்தம் இடம்பெறுவதில்லை. ஏனெனில் புலிகளுக்கு இரவுத் தாக்குதலே சாதகமாக இருந்தது. இரவில்  விமானங்களில் இருந்து பார்க்க முடியாது என்பதால், அவர்களால் தம்மை உருமறைத்து தாக்குதலை மேற்கொள்ள முடியும். இதனால் பொதுவாகப் பகலில் யுத்தம் என்பது எதிர்பார்க்கப்படுவதில்லை.

பசிலன்- 5000 மற்றும் பசிலன்- 2000 போன்ற தமது தயாரிப்பு மோட்டார்களையே புலிகள் பயன்படுத்தினர்.  இங்கு குறிப்பிடப்படும் பசிலன்- 5000 மற்றும் பசிலன்- 2000 போன்ற மோட்டார் குண்டுகளுக்குள் இரும்புத் துண்டுகள் இருக்கும். மோட்டார் குண்டு வெடிக்கும் போது கூர்மையான உலோகத் துண்டுகள் சிதறும். இது அலுமினியத்தால் மூடப்பட்டு தயாரிக்கப்பட்டது. இவை வழமையாக  பேரூந்துகளின் அடித்தளத்திலிருந்து அகற்றப்பட்டதாக இருக்கும்.

இந்த மோட்டார் குண்டுகள் வெடிப்பதற்கு அவை கூர்மையான மூக்குப் பகுதி நேராக நிலத்தில் விழ  வேண்டும். நாங்கள் அடிக்கடி காலை வேளைகளில் புலிகளின் வெடிக்காத மோட்டார்களை எடுப்போம். புலிகளின் பல குண்டுகள் வீணாகியிருந்தன என்பதை நாங்கள் இவற்றின் மூலம் அறிந்து கொண்டோம். பின்னர் புலிகள் தமது தொழினுட்பத்தை முன்னேற்றியிருந்தார்கள்.

சில வாரங்களாக, ஒவ்வொரு நாள் இரவும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஏப்ரல் மாதத்தின் முடிவில் நாங்கள் எமது பாதுகாப்பு நிலைகளிலிருந்து முன்னேறத் தொடங்கினோம். அதிகாலையில், நாம் முன்னேறிச் செல்வதற்காக விமானப் படையினர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதன்மூலம் நாங்கள் எமது முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடிந்தது.

இதன்பின்னர் எமது தாக்குதல் வாகனங்கள் புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்துச் சென்றன. இதனைத் தொடர்ந்து காலாட்படையினர் முன்னேறிச் சென்றனர். இராணுவப் படையினர் தமது நிலைகளின் ஊடாக முன்னேறிச் சென்று கொண்டிருந்த வேளையில், கடற்படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தினர்.

நாங்கள் சில வீரர்களை இழந்தோம். சில வீரர்கள் காயமுற்றனர். இந்தத் தளத்தை புலிகள் வசம் இழந்துவிடக் கூடாது என்கின்ற மூலோபாய முக்கியத்துவத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.

எமது தாக்குதல் நடவடிக்கை முற்றுப்பெற்ற பின்னர், நாங்கள் எமது தளத்தைப் பலப்படுத்தினோம். இதன் பின்னர் தான் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பயங்கரமானது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஒரு சில புலிகள் மட்டும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது. நாங்கள் வெளியே வந்தபோது வித்தியாசமான முறையில் அழிவு ஏற்பட்டிருந்ததைக் கண்டுகொண்டோம்.

காரைநகர் முற்றுமுழுதாக அழிவுற்றிருந்தது. அங்கிருந்த 90 வீதமான வீடுகள் முன்னேறிய படையினரால் பலவந்தமாக உடைக்கப்பட்டன. தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன்.

அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். துணிமணிகள் இழுக்கப்பட்டும் குடும்ப ஒளிப்படங்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டன. கால்நடைகள் மற்றும் ஆடுகள் போன்றன சுதந்திரமாக விடப்பட்டிருந்தன. வீடுகளுக்குள் மாடுகள் நிற்பதை நான் பார்த்தேன்.

இந்த வீடுகளுக்குத் திரும்பி வரும் எவரும் இவ்வாறானதொரு நிலைமையை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். தமது வீடுகளுக்குத் திரும்பி வருவோர் இளைஞர்களாக இருந்தால் அவர்கள் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டிருப்பார்கள்.

கோயில்களில் சென்று தங்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தலை இராணுவத்தினரே மேற்கொண்டனர். காரைநகரில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீடுகளுக்குள் நுழையும் மக்கள் மீது சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் மதத்தலம் ஒன்றில் அடைக்கலம் புகும் எவர் மீதும் தாக்குதல் நடாத்த முடியாது என்பது ஒரு சட்டமாகும். அதனால் தான் கோயில்களில் அடைக்கலம் புகுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் கண்காணிப்பதற்கும் இது இலகுவான முறையாகும். சில நாட்களில், இராணுவத்தினர் காரைநகர் தீவு முழுவமையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். அத்துடன் இவர்கள் பொதுமக்களுக்குள் புலிகள் ஊடுருவியுள்ளனரா என்பதையும் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர்.

ஆனால் நான் இதைவிட இராணுவத்தினரின் வேறுவிதமான அராஜகங்களையும் நேரில் பார்த்தேன். அதாவது ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் நிற்குமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்ட போது பெண்கள் எவ்வாறான அச்சத்திற்கு உள்ளாகினர் என்பதை என்னால் உணரமுடிந்தது.

இந்த விடயத்தில் கடற்படையினர் தலையீடு செய்ய வேண்டும் என வடக்கிற்கான எமது தளபதியிடம் நான் கேட்டுக்கொண்டேன். இதற்கான முழுப்பொறுப்பையும் நாம் கொண்டிருந்ததால் இதில் நாம் தலையீடு செய்யவேண்டும் எனக் கூறினேன். தரைப்படையினர் இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தபோதிலும், மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களின் நலனிற்கும் கடற்படையினரே பொறுப்பாக இருந்தனர். எமது சகஇராணுவத்தினரின் செயற்பாடுகளால் நாங்கள் பொறுப்பை ஏற்கவேண்டி வரும் என நான் கூறினேன். இதனால் இந்த மக்களின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

முதலில் அனைத்துக் குடும்பங்களும் ஒரேயிடத்தில் ஒன்றாக தங்கவைக்கப்பட வேண்டும் என நான் கூறினேன்.  அப்போதுதான் மக்கள் அனைவரும் தாம் தமது குடும்பங்களுடனும் அயலவர்களுடனும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள் என  நான் கூறினேன். பொதுமக்கள் தொடர்பான இறுதி முடிவை கடற்படைக் கட்டளைத் தளபதியே எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இராணுவ வீரர்கள் காரைநகரில் மக்களின் பொருட்களை அபகரிப்பதற்கான முயற்சியில் இறங்கினர். ஆனால் இவர்கள் இவ்வாறு செய்தால் பாரிய பிரச்சினையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதை உணர்ந்துகொண்டோம். படையினரைக் கட்டுப்படுத்துமாறு அவர்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் கூறினேன்.

இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் கொள்ளையில் ஈடுபட்டனர். அதாவது சாமிஅறையிலேயே மக்கள் தமது பெறுமதி மிக்க பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பார்கள் என்பதை இவர்கள் அறிந்திருந்தனர். இதனால் சாமி அறைகளை இராணுவத்தினர் உடைத்து அங்கு நகைகளைத் தேடினர். நான் ஏற்கனவே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களைக் கேள்வியுற்ற போதிலும் நேரில் காண்பது இதுவே முதற்தடவையாகும்.

உங்களது வீடுகளுக்கு நீங்கள் ஒன்று அல்லது அதற்கு சில வாரங்களுக்குப் பின்னால் திரும்பிச் செல்லும் போது அவை உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தால் அந்தச் சூழலை ஒருதடவை கற்பனை செய்து பாருங்கள்.

உங்களது குடும்ப ஒளிப்படங்கள் அடங்கிய அல்பம் அந்நியர் ஒருவருக்கு ஒருபோதும் தேவைப்படாது. ஆனால் அது உங்களுக்கு மிக அரிய பொக்கிசமாகும். இதற்குள்ளே பல அரிய நினைவுகளை நீங்கள் பாதுகாத்து வைத்திருப்பீர்கள். ஆனால் தற்போது அந்த அரிய நினைவுகள் எல்லாவற்றையும் நீங்கள் இழந்திருப்பீர்கள். இது எவ்வளவு வேதனையானது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

நான் ஒரு சில இளம் இராணுவ அதிகாரிகளிடம் ஏன் இவ்வாறான கொள்ளைகள் இடம்பெறுகின்றன எனக் கேட்டிருந்தேன். இது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிற்குச் சாதகமாக அமையாதா? என நான் அவர்களைக் கேட்டேன்.

அதற்கு இராணுவ அதிகாரிகள், கண்ணிவெடியின் போது தமது கால்களை இழந்த இராணுவத்தினருக்கு காப்புறுதி தேவைப்படுவது தொடர்பாக எனக்கு நீண்ட கதைகளைக் கூறினர்.

‘இங்கே பாருங்கள், நீங்கள் உங்களுடைய இராணுவத்தினரின் கால்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதற்காக அரசாங்கம் இருக்கிறது. அமைச்சு இருக்கிறது. அவர்களிடம் உங்களது இராணுவ வீரர்களின் நலன்களைக் கவனிப்பதற்கான பொறுப்புள்ள ஆட்கள் உள்ளனர். உங்களது இராணுவத்தினரின் நலன்களுக்காக மக்களின் பொருட்களைக் கொள்ளையிட வேண்டாம்’ என நான் அவர்களிடம் தெரிவித்தேன். இந்தக் கதையை இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறுமாறும் நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

யுத்தத்தின் போது இவையெல்லாம் இடம்பெறுவது வழமைதான் என அவர்கள் என்னிடம் விவாதித்தார்கள். இருக்கலாம். ஆனால் நாங்கள் இராணுவத்தினரை பயிற்றுவித்து மதிப்பளித்து வைத்திருக்கிறோம் என்பதால் கட்டளை அதிகாரிகள் அனைவரும் தமக்குக் கீழுள்ள வீரர்களின் பிழைகளைச் சரிப்படுத்த முன்வரவேண்டும். எங்களில் ஒருசிலர் இதனைச் செய்தால் இவ்வாறான தவறுகள் தடுக்கப்படும் என நான் கூறினேன்.

ஆனால் அவர்கள் நான் கூறியதைச் செவிமடுக்கவில்லை. அவர்களும் இதனால் நன்மை பெற்றிருப்பார்களா? அல்லது இது அவர்களுக்கு இலகுவான தெரிவா?

தாக்குதல் நடந்த பின்னர் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் கடற்படையினர் எவராவது பொருட்களைக் களவெடுத்து வைத்துள்ளார்களா என சோதிக்கப்படுவார்கள். இவ்வாறான நடைமுறை ஒன்று உள்ளது. அனைத்து வீரர்களும் தமக்கான ஆயுதங்களை வைத்திருக்கின்றனரா என சோதிப்பதற்கு ஒப்பானதாகும்.

தாக்குதல் நடவடிக்கை முடிந்த பின்னர் உங்களது ஆயுதங்களும் உங்களது சட்டைப்பைகளும் வெறுமையாகவே உள்ளன என்பதை நீங்கள் காண்பித்துக் கொள்ள வேண்டும். இது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகும். மாறாக இது எவரையும் துன்புறுத்துவதற்காகவல்ல.

யுத்த சூழலில் நாங்கள்  நிற்கும் போது இது வழமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால் தவறு ஒன்று நடந்தால் அது தவறு தான். இது யுத்த சூழலிலோ அல்லது போரின் போதோ இடம்பெற்றாலும் அது தவறுதான்.

இராணுவத்தினர் கொள்ளையில் ஈடுபடுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் படையினர் தம்வசம் வைத்திருந்த களவாடப்பட்ட பொருட்களுடன் காரைநகரை விட்டு வெளியேறுவதை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தது. அதாவது இந்த வீரர்கள் எமது கடற்படைப் படகுகளின் மூலமே வெளியேற்றப்பட வேண்டியிருந்ததால் அவர்கள் தம்முடன் தமது இராணுவப் பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என நான் கட்டளை பிறப்பித்தேன்.

ஆகவே இந்த வீரர்கள் தம்வசம் வைத்திருந்த பொருட்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை ஓரிடத்தில் குவித்தனர். அவற்றில் திருமண ஒளிப்படங்கள் சிலவும் இருந்ததை நான் பார்த்தேன். இவை அந்நியர்களின் ஒளிப்படங்கள் அதாவது இவை அந்நியர்களின் வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட அந்நியர்களின் ஒளிப்படங்கள். ஆகவே இது பணம் சம்பந்தப்பட்டதல்ல. இவ்வாறான விடயங்களை எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியாது.

களவாடப்பட்ட பொருட்களில் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், ஈருருளிகள் போன்றனவும் காணப்பட்டன. இது சாதாரண கொள்ளை. ஆனால் பின்னர் இதுவே யுத்தத்தின் சின்னங்களைக் களவாடும் அளவிற்கு விரிவடைந்தது. பொருட்களை அழிக்குமாறு கட்டளையிடப்படும் போது, நீங்கள் எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் அளவிற்கு உங்களது மனநிலை வளர்ந்திருக்கும்.

வழிமூலம் – The guardian