ஜனநாயக மீறல் செயற்பாடுகளை அனைவரும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்-ஹர்ஷன ராஜகருண

279 0

கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்ற ஜனநாயக மீறல் செயற்பாடுகளை அனைவரும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

  எதிர்க்கட்சியினருக்கு  எந்த விடயங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டும் என்ற  வரையறை கிடையாது. தற்போது மின்சார துண்டிப்பு விடயத்தையும் அரசியல் மயப்படுத்தி விட்டார்கள். அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒவ்வொரு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஏதாவது குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள்.

ஆனால்  இவர்களே  இன்று தேசிய  நிதி மீதும்.  ஜனநாயகம் மீதும் அக்கறை கொண்டவர்களாக கருத்துரைக்கின்றார்கள். கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்ற ஜனநாயக மீறல் செயற்பாடுகளை அனைவரும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்திற்குள் எவ்வித  முரண்பாடுகளும் கிடையாது.  எங்களை குறை கூறிக் கொண்டு  எதிர்தரப்பினரே தங்களின்  கட்சிக்குள் காணப்படுகின்ற முரண்பாடுகளையும்,  பதவி போட்டித்தன்மையினையும் மூடி மறைக்கின்றார்கள்.  எதிர்க்கட்சியினருக்கு  நேற்று பாராளுமன்றத்தில் தக்க பதிலடியினை  வழங்கியுள்ளோம். அமைச்சர் கபீர் ஹஷிமின் அமைச்சுக்கு   ஆளும்  தரப்பினரே வாக்கெடுப்பினை கோரி  83 வாக்குகளினால் நிறைவேற்றியுள்ளோம். இவ்விடயம் தொடர்பில்  எதிர்க்கட்சியினர் கருத்துரைப்பது கிடையாது.