ஐ.நா. தீர்மானத்தை குப்பையில் எறிய வேண்டும்- விமல்

317 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்திற்கு ஆடவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்தோடு, ஐ.நா. தீர்மானத்தை குப்பையில் தூக்கியெறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலிவேசம் போட்டு ஆடுகின்றார்கள்.

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு குப்பையில் தூக்கிவீச வேண்டும். அதன் பரிந்துரைகள் அனைத்தையும் அடியோடு நிராகரித்து உலக நாடுகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பவேண்டும்.

ஐ.நாவின் புதிய தீர்மானத்துக்கு இலங்கை அரச குழு இணை அனுசரணை வழங்கியமை மகா தவறு.

நாட்டின் ஜனாதிபதி சுமந்திரன் அல்லர். மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தான்தான் நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் ஜெனீவாவில் செயற்பட்டுள்ளார்.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானமே ஆகும். இதனை வெறும் தீர்மானமாக நாம் நினைக்கக்கூடாது.

இந்தத் தீர்மானத்தை குப்பையில் தூக்கிவீச வேண்டும். குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்த எமது இராணுவத்தை எவரும் தண்டிக்கவே முடியாது” என கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. பிரேரணை ஊடாக ஒரு தீர்வு கிடைக்குமென நம்பப்படும் நிலையில், மஹிந்த தரப்பினர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.