ஆந்திராவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: நாய்களுக்கு இரையான பச்சிளம் குழந்தை

391 0

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள மாமிடிபாளையம் ஏரிக்கரை அருகே பலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சில நாய்கள் ஏதோ மாமிசத்தை தின்று கொண்டிருந்தன. இதை பார்த்து அருவருப்பு அடைந்த அவர்கள் நாய்களை விரட்டிவிட்டனர். பின்னர் அருகில் சென்று பார்த்தபோது நாய்கள் தின்றது மாமிசம் இல்லை, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் என்பதை அறிந்து அதிர்ந்து போயினர்.

பின்னர் அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், நாய்கள் தின்றது போக எஞ்சி கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பச்சிளம் குழந்தையை பெற்றோர் வேண்டாம் என வீதியில் வீசி சென்று, நாய்கள் குழந்தையை கடித்து கொன்றதா? அல்லது இறந்து போன குழந்தையை புதைக்காமல் அலட்சியமாக வீதியில் வீசி சென்றார்களா? என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.