வளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு

216 0

வளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்ற ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட இச் சடலம் ஆரையம்பதி -2 செல்வா நகரைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் (வயது 49) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய சடலத்தை அவதானித்த மீனவர்களும் பொதுமக்களும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் கிராம அலுவலருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.