ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கடந்த நான்கு வருடகாலமாக தவறான அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டமையின் காரணமாகவே இன்று சுதந்திர கட்சி வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, இந்நிலைமை தொடருமாயின் கட்சி முற்றாக அழியும் நிலைமை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினை நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள். இதனாலே பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவினை வழங்கினார்கள். இந்த வெற்றியினை எம்மால் தொடர்ந்து தனித்து முன்னெடுத்து செல்ல முடியும். ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் பரந்துப்பட்ட கூட்டணியமைத்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டும் என்று இரண்டு தரப்பு தலைமைத்துவமும் எதிர்ப்பார்க்கின்றமையினை மதிக்க வேண்டும். ஆனால் இதற்கு சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் தடைகளை ஏற்படுத்துகின்றார்கள்.
இன்று சுதந்திர கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தற்காலிகமாகவே அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள். இவர்கள் தங்களின் அடுத்த அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள சுதந்திர கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்றார்.


