மத்திய அரசு அமைத்த நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது

425 0

201610060930339486_centre-constitutes-team-to-assess-cauvery-basin-situation_secvpfகாவிரி நீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது.

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் அந்த குழு 17-ந் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

அதன்பேரில் மத்திய நீர்வளத்துறை மற்றும் நதிகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா மற்றும் கோதாவரி படுகை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து உள்ளது.

இந்த நிபுணர்கள் குழுவின் கூட்டம் பெங்களூருவில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளுமாறு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை என்றால் பிரதிநிதிகளை அனுப்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்களின் பெயர்களை தெரிவிக்குமாறும், இவர்கள் அனைவரும் இன்றைக்குள் (வியாழக்கிழமை) பெங்களூரு வந்து சேருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த குழுவினர், அணைகளுக்கு சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து நாளைய கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு சென்று அங்குள்ள நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவற்றை பார்வையிட்டு, 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.