‘வேட்பாளர் மீது திருப்தி இல்லாவிட்டால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’! – தேர்தல் ஆணையம்

262 0

தேர்தலில் ‘போட்டியிடும் வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என்று தேர்தல் ஆணையம் போஸ்டர்கள் அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓட்டுப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு தலைப்புகளில் போஸ்டர்கள் அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

‘நமது இலக்கு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு’ என்று ஒரு போஸ்டரும், ‘ஓட்டளிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்’ என்ற தலைப்பில் மற்றொரு போஸ்டரும் அச்சிடப்பட்டுள்ளது.

உடல் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், சிரமமின்றி ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளது.

தேர்தலில் ‘போட்டியிடும் வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என்று ஒரு போஸ்டரும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டு எந்திரத்தில், ‘நோட்டா’ பட்டன் இருக்கும் இடமும் காண்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் என்ற தலைப்பில் உள்ள போஸ்டர், தேர்தல் ஆணையத்தின் ‘சிவிஜில் ஆப்’ நோக்கம், பயன்பாடு பற்றி விளக்குகிறது. இந்த போஸ்டர்கள் பொதுஇடங்கள், அரசு அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகளில் ஒட்டப்பட உள்ளது.