சிரியா துறைமுகத்துக்கு அதிநவீன ஏவுகணை ஏவுதளத்தை ரஷியா அனுப்பியது

275 0

201610050927000175_russia-sends-missile-system-to-syria-port_secvpfசிரியாவில் உள்நாட்டுப் போர்நிறுத்தத்துக்கான முயற்சிகள் அனைத்துமே பொய்த்துப்போன நிலையில் S-300 என்ற அதிநவீன ஏவுகணை ஏவுதளத்தை சிரியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள டார்டஸ் துறைமுகத்துக்கு ரஷியா அனுப்பிவைத்துள்ளது.

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.

இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சண்டை நிறுத்தம் அறிவித்தனர்.

ஆனாலும், அலெப்போ நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இருதரப்பினரும் உடன்படிக்கையை மீறி மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.சிரியா முழுவதும் சண்டை நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக ஜெனிவாவில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இருப்பினும் சிரியாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில தினங்களில் மீண்டும் அதனை மீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் சண்டை நிறுத்தம் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா, ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இதுதொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் சிரியா முழுவதும் சண்டை நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பான ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்கா நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இந்த முடிவு மிகவும் சாதாரணமாக எடுக்கப்பட்டது அல்ல. ரஷ்யா மற்றும் சிரியா கூட்டணி பொதுமக்கள் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சிரியாவில் ஒரே இடத்தில் தாக்குதல்களை நடத்தாமல் இருப்பதை தவிர்க்க இருநாடுகளிடையே தகவல் தொடர்பு அமைப்பு தொடர்ந்து இயங்கும்” என்றார்.

இந்நிலையில், S-300 என்ற அதிநவீன ஏவுகணை ஏவுதளத்தை சிரியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள டார்டஸ் துறைமுகத்துக்கு ரஷியா நேற்று அனுப்பிவைத்துள்ளது.

போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு பிறநாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷியா பாதுக்காப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகார் கோனாஷேன்கோவ், ‘இந்த S-300 ஏவுகணை ஏவுதளம் முற்றும் முழுக்க தடுப்பு நடவடிக்கைகாகவே சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதை சிரியாவில் நிறுவுவது தொடர்பாக மேற்கத்திய நாடுகள் ஏன் இவ்வளவு கலக்கம் அடைந்துள்ளன? என்பது புரியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.