வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ஐவருக்கு விளக்கமறியல்

423 0

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருவிட்டான் கிராமத்தில்  வீடு ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை கண் மூடித்தனமாக  தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த குழு ஒன்றை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததாகவும் வீட்டில் உள்ளவர்களை ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியதாகவும் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 5 பேர்கள் மீது குறித்த குழுவினர் ஆயுதங்களால் கண் மூடித்தனமாக தாக்கிய நிலையில் காயமடைந்தவர்கள் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல்களை மேற்கொண்ட 5 பேர்கள் முருங்கன் பொலிஸாரால் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு நேற்று முந்தினம் திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த  5 பேரையும் தொடர்ந்தும் எதிர் வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர்கள் 5 பேரையும் பிணையில் விடுவிக்க சந்தேக நபர்கள் சார்பான ஆஜரான சட்டத்தரணிகள் இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்த போதும்,குறித்த பிணை மனுவை நீதவான் நிராகரித்தார்.

இதே வேளை குறித்த சந்தேக நபர்களை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் வைத்தே விடுதலை செய்ய உள்ளூர் அரசியல் வாதிகள் சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அது பயணளிக்கவில்லை.Share