என்னை விட தேசத்தையே அதிகம் நேசித்தாய்!

254 0

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த மேஜருக்காக, அவரின் மனைவி எழுதிய கவிதை வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ மேஜர் வி.எஸ்.தவுன்டியால் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேஜர் விபுதி சங்கர் தவுன்டியாலுக்கும் நிகிதா கவுலுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் திருமணம் நடைபெற்றது. விரைவில் முதலாமாண்டுத் திருமண விழாவைக் கொண்டாட இருவரும் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் மேஜர் தவுன்டியால் தாக்குதலில் பலியானார்.டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் நிகிதா கவுல். அன்புக் கணவனின் வீர மரணம் குறித்து அறிந்தவர், டேராடூனுக்கு விரைந்தார்.

தவுன்டியாலின் இறுதிச் சடங்கில், நிகிதா கனத்த மவுனத்துடன் கலந்துகொண்டார். நீண்ட நேரம் வீர மரணம் அடைந்த கணவரின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவர், இறுதியாக ஒருமுறை அவருடன் பேசினார்.

அவரின் உடலை முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் மேஜரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தனது அன்புக் கணவர் விபுவுக்காக  நிகிதா எழுதிய வரிகள் வைரலாகி வருகின்றன

என்னிடம் பொய்யுரைத்துவிட்டாய்

‘நிகிதா உன்னைக் காதலிக்கிறேன்’ என..

சொல்லப்போனால் என்னைவிட

நீ அதிகம் காதலித்தது நாட்டைத்தான்…

எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது

ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை..

மக்களுக்காகவே உன் வாழ்க்கையை

தியாகம் செய்துவிட்டாய்..!

உறுதியான இதயம் கொண்டவன் நீ..

உன்னை என் கணவனாக பெற்றதில்

பெருமை எனக்கு..

நீ என்னை விட்டுச் சென்றது

அத்தனை வலிக்கிறது..

ஆனால் எனக்குத் தெரியும்

இறுதி வரை என்னுடன்தான் இருப்பாய்..

என் கடைசி மூச்சு வரை

உன்னை காதலித்துக்கொண்டே இருப்பேன்..

ஐ லவ் யூ விபு!