போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பிலான நடவடிக்கை வெற்றி பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று போதைப்பொருள் பாவனையிற்கு அடிமையாகியுள்ளனர். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கெனினோ சூதாட்டம் ஆகிய முறையற்ற செயற்பாடுகளில் ஆளும் தரப்பிலும், எதிர்தரப்பிலும் உறுப்பினர்கள் உள்ளனர்.
சமூக விரோத செயற்பாடுகள் இடம் பெறும் பொழுது அதில் அரசியல்வாதிகளின் வகிபாகம் நிச்சயம் ஒரு பகுதியளவில் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்ட பொழுதும் அவற்றினால் எவ்விதமான தீர்வுகளும் இதுரை காலமும் கிடைக்கப் பெறவில்லை.
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுமக்கள் மத்தியில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளனர்.
தற்போது போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. கோக்கைன் போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சரவை உறுப்பினர்கள் தொடர்பில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


